உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் இலக்கினை அடைவதற்கு ஒரு கருவியாக ‘உலகத்தமிழ்’ இதழைக் கைக்கொண்டுள்ளது. ‘உலகத்தமிழ்’ மின்னிதழ் காலாண்டிதழாக 2018ஆம் ஆண்டு சூன் திங்கள் முதல் பன்னாட்டுத் தர வரிசை எண்ணுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. வார இதழாக 2019ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் இரண்டாவது வாரம் முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் ‘உலகத்தமிழ்’ மின்னிதழுக்கு அணிசேர்க்கும் வகையில் திங்கள் இதழும் இணைகிறது. 2020 செப்டம்பர்த் திங்கள் முதல் ‘உலகத்தமிழ்’ திங்களிதழ் திங்கள்தோறும் மலர்ந்து வருகிறது.
“அவசரத்தில் பிறக்கும் இலக்கியம் இதழியல்” என்பார் மேத்யூ அர்னால்டு. ஒவ்வொரு இதழும் இலக்கியத் தரத்தோடு வெளிவர வேண்டும் என்ற எங்களின் எண்ணத்திற்கு ஏற்றம் தரும் வகையில் உலகளாவிய நிலையில் தமிழ் மொழியில், இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் புதுமைகளையும் தேவைகளையும் பரிமாறிக் கொள்ளவும் எடுத்துரைக்கவும் ஒரு களமாக ‘உலகத்தமிழ்’ திகழ வேண்டும். ஆய்வுக்கட்டுரைகள், படைப்புகள், நூல் திறனாய்வு, இலக்கியப் பேழை, தமிழறிஞர்களின் பிறந்தநாளையும் நினைவுநாளையும் நினைவு கூர்ந்து சிறப்பிக்க தடம்... எனப் பல பல்சுவை இலக்கியப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டு இத்திங்கள் இதழ் மலரும். படித்து... பகிர்ந்து... படைத்து... பயணத்தில் பங்குகொள்க!